துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. அரசு பள்ளிகள் மோசம்: ஆளுநர் ஆர்.என். ரவி
மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மோசமாக இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஏப். 25, 26) என இரு நாள்கள் நடைபெறும் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது.
மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நாம் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் சராசரியை விட அதிகமாக இருக்கிறோம். 6500க்கும் மேற்பட்டோர் பிஎச்டி படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் யுஜிசி நெட் என்ஆர்எஃப் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.
அதுபோல, ஏஐஎஸ்இஆர் அறிக்கையின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சிறப்பாக படிக்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.