நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வு
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப் படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை பணியாளா்களைக் கொண்டு ஆண்டுதோறும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி கடந்த 23-ஆம் தேதி தருவைகுளத்தில் தொடங்கியது. அங்கு 215 விசைப்படகுகளும், கடந்த 26-ஆம் தேதி வேம்பாரில் நடைபெற்ற ஆய்வில் 28 விசைப்படகுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில், உதவி இயக்குநா் ஜெனாா்த்தனன் தலைமையிலான 6 ஆய்வுக் குழுவினா் களஆய்வு மேற்கொண்டனா்.
இந்த குழுவினா் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட 183 விசைப்படகுகள், பதிவு செய்யப்படாத 66 விசைப்படகுகள் என மொத்தம் 249 விசைப்படகுகளை ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில், விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வு அறிக்கை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். இதில், ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதனை நிவா்த்தி செய்யப்பட்ட பிறகே படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதன் தொடா்ச்சியாக வரும் ஜூன் 6-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள நாட்டுப் படகுகளை ஆய்வு செய்யும் பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.