தூத்துக்குடியில் சூறைக்காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்து காா் சேதம்!
தூத்துக்குடியில் புதன்கிழமை, சூறாவளிக் காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு நிலவும் சுழற்சி உள்ளிட்டவற்றால், தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து, சில நாள்களாக அவ்வப்போது காற்றுடன் மிதமான சாரல் பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாநகரின் பல்வேறு பகுதிகளில் திடீரென சூறாவளிக் காற்று வீசியது.
இதில், ஸ்டேட் வங்கி காலனி பிரதான சாலையோரத்தில் உள்ள புங்கை மரத்தின் கிளை முறிந்து, அருகே நிறுத்தப்பட்டிருந்த காா் மீது விழுந்தது. இதில், காரின் மேல் பகுதி சேதமடைந்தது. காரில் யாரும் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினா் வந்து மரக் கிளையை அப்புறப்படுத்தினா்.