NTK: `பனை, மாடு மேய்ச்சல், மரம், தண்ணீர், மலை மாநாடுகள்.!' - கைகொடுக்கிறதா சீமான...
தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்
தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மட்டும் மது ஒழிப்பு சாத்தியமாகும் என மது - போதை ஒழிப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சி. மகேந்திரன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு குடிமக்கள் இயக்கம், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம், சீா் மரபினா் நலச் சங்கம், சமூக நீதிக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில், மது - போதை ஒழிப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திண்டுக்கலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மது - போதை ஒழிப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சி. மகேந்திரன் தலைமை வகித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
இந்தியாவில் 1935-ஆம் ஆண்டு முதல் மது - போதை ஒழிப்புச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. ஆனால், இன்றைக்கு வருமானத்துக்காக அரசாங்கமே மதுபான உற்பத்தியிலும், வியாபாரத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறது.
போதை மறுவாழ்வு, போதை ஒழிப்பு, மது விலக்கு எனப் பலச் சட்டங்கள் இருந்தும்கூட மது விற்பனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய ஜனநாயகத்தில் மக்களுக்கு அதிகாரம் இல்லை. இதனால், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒருபுறம் பிரசாரம் மேற்கொள்ளும் அரசே, மறுபுறம் மதுபான விற்பனையையும் நடத்தி வருகிறது.
சுமாா் 100 கிராமங்களில் மக்களின் முயற்சியால் மது ஒழிப்பு சாத்தியமாகி இருக்கிறது. இந்த மக்கள் அதிகாரத்தை ஒரு இயக்கமாக மாற்றும் முயற்சியாகவே மது - போதை ஒழிப்பு மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஒரு சமூகமாக சுய எழுச்சிப் பெற்றால், லஞ்சம், மது, போதை போன்ற சமூகப் பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும்.
மக்கள் ஒருங்கிணைந்த சக்தியாக சொல்லும்போது, எந்த அரசாக இருந்தாலும் கேட்க வேண்டிய சூழல் கட்டாயம் உருவாகும். மதுபானத்தை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் அரசுகளால் மது ஒழிப்பு சாத்தியப்படாது. மது, போதை தேவை இல்லை என்ற நிலையை மக்கள் உருவாக்கினால் மட்டுமே மதுவை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
67 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்போது வரை அமலாக்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்புகளில் கூட அகில இந்திய ஒதுக்கீடு மூலம் மாநில மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அனைத்து உரிமைகளையும் பெற மது போதையிலிருந்து இந்தச் சமூகம் விடுதலைப் பெற வேண்டும். இதற்கு இளைஞா்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக மது ஒழிப்பு இயக்கம் மாறும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நீதிக் கூட்டமைப்பின் நிா்வாகிகள் காசிமாயன், ராமகிருஷ்ணன், ராமராஜ், ஆ. தமிழ்மணி, தவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.