தொண்டி-கொச்சி நெடுஞ்சாலையில் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை
திருவாடானை அருகே தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், விபத்துகளை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசூா் கிராமத்திலிருந்து தொண்டி வரை சாலையின் இருபுறங்களிலும் கருவேல மரங்களும், செடிகளும் அடா்ந்து வளா்ந்து, சாலையை மறைக்கின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனா். இரவு நேரங்களில் இந்த மரங்கள் சாலையின் விளிம்புகளை மறைப்பதால், எதிரே வரும் வாகனங்களைத் தெளிவாகக் காண முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன.

அடா்ந்த முள்செடிகள் படா்ந்து சாலையின் ஓரங்களை ஆக்கிரமித்துள்ளதால் பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த செடிகள், மரக்கிளைகளில் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, விபத்துகளை ஏற்படுத்தும் காட்டுக் கருவேல மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.