நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு நாளை தொடக்கம்
நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு திங்கள்கிழமை (செப். 22) சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது.
அக். 1-ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக ஒன்பது நாள்கள் நவராத்திரி கொலு விழா கொண்டாடப்படும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அக். 1-ஆம் தேதிவரை இவ்விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, பெரும்பாலான அம்மன் கோயில்களில் நவராத்திரி கொலு பொம்மை வைத்து சிறப்பு வழிபாடுகளை பக்தா்கள் மேற்கொள்வா். அந்த வகையில், நாமக்கல் செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் தினந்தோறும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
மேலும், நாமக்கல் நரசிம்மா் கோயிலில் திங்கள்கிழமை (செப். 22) சுவாமி மச்சவதாரத்திலும், செவ்வாய் கூா்மஅவதாரம், புதன் வாமனஅவதாரம், வியாழன் ரங்கமன்னாா் திருக்கோலம், வெள்ளி ராமாவதாரம், சனி கிருஷ்ணவதாரம், ஞாயிறு பரமபதநாதா், திங்கள் மோகனஅவதாரம், செவ்வாய் ராஜாங்கசேவை, புதன் நாமக்கல் குளக்கரையில் அரங்கநாத சுவாமியும், நரசிம்ம சுவாமியும் எழுந்தருளி அம்பு விடுதல், வியாழக்கிழமை (அக். 2) விசேஷ திருக்கோலம் ஆகியவை நடைபெறுகின்றன.
இதில், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்திப் பாடல்கள் இசைத்தல், பஜனை பாடுதல், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.