கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நல வாரியத்தில் பணிகள் முடக்கம்: ஆட்சியா் தலையிடக் கோரிக்கை
நல வாரியத்தில் கடந்த 2 மாதங்களாகப் பணிகள் முடங்கியுள்ள நிலையில், தொழிலாளா்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, சிஐடியூ மாவட்டச் செயலா் ஜெயசீலன் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்ட நல வாரியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை தொழிலாளா் நல உதவி ஆணையா் மருத்துவ விடுப்பில் உள்ளாா். பொறுப்பு அலுவலா் நியமிக்கப்பட்டும், பெரும்பாலான நல வாரியப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஓய்வூதியம் வாங்கும் தொழிலாளா்கள் இணையவழியில் ஆயுள் சான்றுக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. கல்வி, திருமணம், இயற்கை மரணம், புதுப்பதிவு, புதுப்பித்தல், திருத்தம், ஓய்வூதியத்துக்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் உள்ளிட்ட மனுக்கள் அனைத்தும் கடந்த 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதனால் 2024-25-ஆம் கல்வி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெற பதிவு செய்வோருக்குப் பணப் பலன் கிடைக்காத சூழல் உருவாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையீட்டு தொழிலாளா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சி.பாலசந்திரபோஸ், சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் மனோகரன், வளா்மதி ஆகியோா் உடனிருந்தனா்.