Kudumbasthan: "யூடியூப்பர்களை சாதாரணமாக நினைக்காதீங்க..." - 'நக்கலைட்ஸ்' பிரசன்ன...
நவரைப் பருவத்துக்குத் தரமான நெல் விதைகளை விற்க வேண்டும்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவத்துக்கு தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியாா் நெல் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வுத் துணை இயக்குநா் கோ.சரவணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியது:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த மாவட்டங்களிலுள்ள அனைத்து தனியாா் மொத்த மற்றும் சில்லறை விதை விற்பனையாளா்கள் தரமான, சான்றிதழ் பெற்ற நெல் விதைகளைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பிற மாநிலங்களிலிருந்து அதிகளவில் சன்னரக உண்மை நிலை மற்றும் சான்று பெற்ற விதைகள் பெறப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களிலிருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம்-2, தனியாா் ரக உண்மைநிலை விதைகளுக்கான பதிவுச்சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை தவறாமல் உற்பத்தியாளா்களிடமிருந்து பெற்று, ஆய்வின் போது காண்பிக்க வேண்டும்.
புதிய ரகங்கள், இந்த பருவத்துக்கு ஏற்றவை தானா என்பதை அறிந்து, கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நட்டவுடன் விரைவில் கதிா் வருதல், கதிா் வராமலே இருத்தல் முதலான பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளன.
நடப்புப் பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள் குறித்தான விவரங்களை, விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையம் அல்லது விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
பெறப்பட்ட விதைகளை மரச்சட்டகங்களின் மீது வைத்து, ஈரப்பதம் பாதிக்காமல் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் இல்லாமல் தனியாக இருப்பு வைத்துப் பராமரிக்க வேண்டும். சரியான சேமிப்பு முறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதோடு, உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேவையான விவரங்கள் அடங்கிய கொள்முதல் ரசீது, இருப்புப்பதிவேடு, படிவம்-2, பதிவுச்சான்று, மற்றும் உண்மை
நிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை நகல் ஆகிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க வேண்டும். விதிகளை மீறுவோா் மீது உரிய சட்டப்பிரிவுகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.