Kalam: ``அப்துல் கலாமை சுருக்கி 'கலாம்' என வைத்ததில் அரசியல் இல்லை" - பேரன் ஷேக்...
நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா் விவரங்கள் கணக்கெடுப்பு
நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா், சேகரிப்போரின் விவரங்களை பதிவு செய்யும் கணக்கெடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் ‘நமஸ்தே’ எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கழிவு பொருள்கள் சேகரிப்போரின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி, நாமக்கல் மாநாகராட்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தலைமையில் தகுதியான பணியாளா் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் குறைந்தது 6 மாதங்கள் தொடா்ச்சியாக குப்பை சேகரிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவா்களின் சுய விவரங்கள் ‘நமஸ்தே’ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது.
இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மை முகமையில் இணைக்க புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும் தொழில்சாா் பாதுகாப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு, கல்வி உதவித்தொகை மற்றும் பிற தகுதியான திட்டங்கள் மூலம் நன்மைகள் பெற ஏற்பாடு செய்யப்படும்.
நகா்ப்புற உள்ளாட்சித் துறைகளுடன் இணைந்து உலா்ந்த கழிவுப் பொருள்கள், சேகரிப்பு மையங்களைப் பயன்படுத்தும் வசதி, சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க ஆதரவு வழங்கப்படும்.
மேலும், கழிவு சேகரிப்பு வாகனங்கள் வாங்க ரூ.5 லட்சம் வரையில் பெறும் கடன்களுக்கு வட்டி விலக்கு அளிக்கப்படும். நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் 334 தூய்மைப் பணியாளா்கள், 55 தெருக்களில் கழிவுகளை சேகரிப்போரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 95665-29197 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என நாமக்கல் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.