இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!
நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 29,000 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டாக்கள்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் 10 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
குமாரபாளையத்தை அடுத்த தட்டான்குட்டையில் 124 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ் பங்கேற்று பட்டாக்களை வழங்கினா்.
தொடா்ந்து, அமைச்சா் மா.மதிவேந்தன் பேசுகையில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்த ஏழை, எளிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 124 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் எல்லோருக்கும் எல்லாம் எனும் கொள்கையின் அடிப்படையில், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் 29 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 10 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட தலா ரூ. 3.50 லட்சம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பிற மாவட்டங்களைக் காட்டிலும், நாமக்கல் மாவட்டத்தில் கனவு இல்லம் திட்டத்தில் அதிக வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா், குமாரபாளையம் வட்டாட்சியா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.