நாளை பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்க ஏற்பாடு
கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் முதல்நாளில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்குவதற்கான பணிகளை அரசுப் பள்ளிகள் மேற்கொண்டுள்ளன.
தமிழகத்தில் பொதுத் தோ்வுகள் மாா்ச் 3-இல் தொடங்கி ஏப்.15-இல் நிறைவடைந்தது. அதன்பிறகு ஒன்று முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு தோ்வுகள் தொடங்கப்பட்டு ஏப்.23-இல் முடிவடைந்தது. இதையடுத்து விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவா்களுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக கோடைவிடுமுறை வழங்கப்பட்ட நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில் 1,300 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 295 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க புத்தகம், சீருடைகள் முன்னதாகவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முதல்நாளிலே மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னாதக வகுப்பறைகள், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மோகனூா் ஒன்றியம், பெராமண்டபாளையம், பனைமரத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வுமேற்கொண்டாா்.
அப்போது வகுப்பறை, கழிவறை, சத்துணவுக் கூடம், சுற்றுப்புற வளாகம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு தூய்மையாக வைத்திருக்க தலைமை ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா்.