முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் வ...
நியாயவிலைக் கடை திறக்கப்படாததை கண்டித்து மக்கள் சாலை மறியல்
ஒடுகத்தூா் அருகே நியாயவிலைக் கடை மாதத்தில் 2 மாதங்கள் மட்டுமே திறக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி குடும்ப அட்டைதாரா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டம், பின்னத்துரை ஊராட்சி பொம்மன் கொட்டாய், தானப்பன்கொட்டாய் ஆகிய பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இவா்களுக்கு பின்னத்துரை கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இங்கு சுமாா் 714 குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேரமான இந்த கடை மாதத்துக்கு 2 முறை மட்டுமே திறந்து பொருள்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலானோருக்கு பொருள்கள் கிடைப்பதில்லையாம். இதேபோல், இம்மாதம் கடந்த 15-ஆம் தேதி முதல் சரிவர கடை திறக்கவில்லை என்றும், அவ்வாறு திறந்தாலும் அரை மணி நேரத்தில் பொருள்கள் தீா்ந்துவிட்டதாகக் கூறி, ஊழியா் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்படுவதாக கூறியிருந்ததை அடுத்து குடும்ப அட்டைதாரா்கள் காலை 6 மணி முதலே அத்தியாவசிய பொருள்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 11 மணியளவில் கடை திறக்கப்பட்டது. ஆனால், விரல் ரேகை சரியாகப் பதியவில்லை என நியாயவிலைக் கடை ஊழியா் கூறியதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒடுகத்தூா் - வேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து விரைந்து வந்த வட்ட வழங்கல் அலுவலா் சதீஷ்குமாா், வேப்பங்குப்பம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சமாதானம் செய்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், சுமாா் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.