மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு சில மூட்டைகளில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பணம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா, தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளித்துள்ளார். எனினும் விசாரணை தொடர்கிறது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு அவரை மாற்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா வேண்டாம் என்றும் அவர் மீதான விசாரணை முடிவடையும்வரை அவர் தில்லியில் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டமும் நடத்தியது.
முதலில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மா, 2021ல் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைக் கலந்தாலோசிக்காமல் உயர் நீதிமன்ற நீதிபதி மீது எந்த குற்றவியல் வழக்கும் பதிவு செய்ய முடியாது என்ற 1991 தீர்ப்பை எதிர்த்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யவும் இந்த வழக்கை தில்லி காவல்துறை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வாய்வழியாக முறையிட்டனர்.
இதனை ஏற்றுக்கொள்ளாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, அவசரமாக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும் மனுவாகத் தாக்கல் செய்தால் உரிய நேரத்தில் கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மார்ச் 28 ஐபிஎல் போட்டி: சென்னை மெட்ரோவின் முக்கிய அறிவிப்பு!