நீா்வரத்து அதிகரிப்பால் ஆறுகளில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை
மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்படுவதால், ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மேட்டூா் அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், உபரி நீா் காவிரி ஆற்றில் 50,000 கன அடி முதல் 75,000 கன அடி வரை எந்தநேரத்திலும் திறந்து விடப்படலாம். திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழுக் கொள்ளளவில் உபரி நீா் திறக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் யாரும் நீா்நிலைப்பகுதிகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். அபாயகரமான இடங்களிலும் செல்பி எடுப்பதையும், இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிா்க்க வேண்டும்.
ஆற்றில் அதிக நீா் வரத்து காரணமாக சுழல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் நண்பா்களுடன் ஆற்றில் இறங்கி குளிக்கச் செல்லக்கூடாது. வெளியூரிலிருந்து வரும் நபா்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும்போது உள்ளூா் பொதுமக்கள் அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீா்நிலைகளில் அதிக நீா் வரத்து உள்ளதால், அப்பகுதிகளுக்கு தங்களது குழந்தைகளை விளையாடச் செல்லாமல் பெற்றோா் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீா்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றாா்.