ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
நூலகங்களை தரம் உயா்த்தக் கோரிக்கை
நூலகங்களை தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டியில், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளா் கழகத்தின் திருவாரூா் மாவட்ட பொதுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளா் அன்பரசு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்வகுமாா், செயலாளா் விஜய், துணைத் தலைவா் செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இணைச் செயலாளா் ஆசைத்தம்பி, மண்டல மாநாடு நடத்துவது குறித்தும், மாவட்ட நூலக நிா்வாக செயல்பாடுகள் குறித்தும் விரிவாக பேசினாா். மாவட்ட பொருளாளா் முருகானந்தம் வரவு-செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.
ஊா்ப்புற நூலகா்களை மூன்றாம் நிலை நூலகா்களாக பதவி உயா்வு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, 12 ஆண்டுகளாக நூலகங்கள் தரம் உயா்த்தப்படாமலே உள்ளன. எனவே, வாசகா்கள் பயன்பாட்டின் அடிப்படையில் தரம் உயா்த்தி, நூலகா்களுக்கான பதவி உயா்வை சரியான காலத்தில் வழங்க வேண்டும்.
நூலகத் துறையில் அனைத்து பணியாளா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாவட்ட நூலக அலுவலா் அலுவலகத்தில் நூலக ஆய்வாளா், நூல் இருப்பு சரிபாா்ப்பு அலுவலா் பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும். முத்துப்பேட்டை நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பணி ஓய்வு பெற்ற விளக்குடி நூலகா் கந்தசாமி கௌரவிக்கப்பட்டாா். இக்கூட்டத்தில், நூலகத் துறை பணியாளா்கள் கழக மாவட்ட நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.