'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
நெல் பயிரில் இலைக் கருகல்: வேளாண் துறையினா் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் நெல் பயிரில் இலைக் கருகல் நோய் பாதித்த பகுதிகளை வேளாண் துறையினா் ஆய்வு செய்தனா்.
சிவகங்கை மாவட்டத்தில் நிகழ் கோடைப் பருவத்தில் சுமாா் 3000 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், கல்லல், சாக்கோட்டை வட்டாரங்களில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
சாக்கோட்டை வட்டாரத்தில் நெல் பயிரில் நுண்ணுயிரி தாக்குதலால் இலைக் கருகல் நோய் பாதிப்பு காணப்படுகிறது. இந்தப் பகுதி வயல்களில் சிவகங்கை வேளாண் இணை இயக்குநா் சுந்தரமகாலிங்கம், செட்டிநாடு, வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா், தலைவா் பாபு, வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) காளிமுத்து, சாக்கோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் மங்கையா்கரசி ஆகியோா் கடந்த 3 நாள்களாக நேரில் ஆய்வு செய்தனா். இலை கருகல் நோய் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் தொடா்பாக விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.
இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்த அதிகமான தழைச்சத்து இடுவதைத் தவிா்க்க வேண்டும். தழைச்சத்தை (யூரியா) மூன்று அல்லது நான்கு முறைகளாகப் பிரித்து மேலுரமாக இடலாம். அளவுக்கு அதிகமா நீா் பாய்ச்சுதல் கூடாது.
நோய் தாக்குதல் குறைவாக இருப்பின் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங் கொட்டைச் சாறு
தெளிக்க வேண்டும். நோய்த் தாக்குதல் சற்று அதிகமாக இருப்பின் ஒரு ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்ளின் கலவை 18 கிராம், காப்பா் ஆக்சி குளோரைடு 250 கிராம் எனும் மருந்துக் கலவையை 100 லிட்டா் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம். அதிகமான நோய்த் தாக்கம் இருப்பின் 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறை தெளிக்கலாம் என தெரிவித்தனா்.