ஓவல் டெஸ்ட்: பிளேயிங் லெவனில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஒத்திவைப்பு
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்பது தொடா்பான தீா்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதைத்தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா? என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதையடுத்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாகவும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்பது தொடா்பாக தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) தீா்ப்பளிக்க இருந்தாா். இந்நிலையில் வழக்கின் கோப்புகளை நீதிமன்றம் மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், அந்தக் கோப்புகளுடன் அமலாக்கத் துறை விசாரணை அதிகாரி ஆக.7,8-ஆம் தேதிகளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி விஷால் கோக்னே செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதன் காரணமாக அந்தத் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.