OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்...
மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா
வயநாடு நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று மக்களவையில் அத்தொகுதிக்கான எம்.பி. பிரியங்கா காந்தி பேசினார்.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30-இல் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பால் பல உயிர்கள் பறிபோயின. ஒட்டுமொத்த நாட்டையும் இந்த பேரிடர் உலுக்கியது.
இது குறித்து வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் புதன்கிழமை(ஜூலை 30) பேசியதாவது: “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் அழிந்தது. அங்கு காஃபி, தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டிருந்தன. அவையனைத்தும் அழிந்தன.
ஆட்டோ ஓட்டுநர்கள், ஜூப் ஓட்டுநர்கள், விடுதி, ஹோட்டல் மற்றும் இப்படி அப்பகுதியில் சிறு வணிகத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரிழந்தனர்.
பேரழிவு நிகழ்ந்து ஓராண்டாகிவிட்டது. ஆனால், பாதிக்கப்பட்டோருக்கு மறுசீரமைப்பு உதவிகள் முறையாக செய்து தரப்படவில்லை.
கடந்த ஓராண்டாக வயநாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறோம். அதன் பலனாக, கொஞ்சம் நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால் இது போதவே போதாது!
தங்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு கடனுதவி அளித்து, அதன்பின் அந்த பணத்தை திருப்பிச் செலுத்துமாறு அரசு அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது நியாயமா?”
”பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும், அதாவது ஓராண்டைக் கடந்தும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், வயநாட்டு மக்களின் சர்பாக நான் வைக்கும் நியாயமான கோரிக்கை இதுதான்: மத்திய அரசு மேற்கண்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தத் தொகை அரசுக்கு ஒரு பெரிய பொருட்டே இல்லை. ஆகவே, இதனைச் செய்ய வலியுறுத்துகிறேன்” என்றார்.