பஞ்சாப் இடைத்தேர்தலில் கேஜரிவால் போட்டி? முதல்வராகிறாரா?
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் நடைபெற்ற பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தில்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த முறை தேர்தலில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி இம்முறை 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், மூன்று முறை தில்லி முதல்வராக பதவி வகித்த அரவிந்த் கேஜரிவால் தோல்வி அடைந்தது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தற்போது ஆம் ஆத்மியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, பஞ்சாபில் 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ரூ. 200 தாளும் திரும்பப் பெறப்படுமா? என்ன சொல்கிறது ஆர்பிஐ?
லூதியானா இடைத்தேர்தலில் கேஜரிவால்
லூதியானா மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஆம் ஆத்மியின் குர்ப்ரீத் கோகி கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனையின்போது, இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இறுதியில் அரவிந்த் கேஜரிவால் போட்டியிட முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பஞ்சாப் இடைத்தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாகவும், வெற்றி பெற்றால் முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் பார்தாப் சிங் பஜ்வா தெரிவித்திருந்தார்.