தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!
தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டிலிருந்து யுனைடெட் ப்ரூவெரிஸின் பீர்களின் அடிப்படை விலையில் மாற்றம் இல்லாததால், பெரும் இழப்புதான் ஏற்படுகிறது என்று அந்நிறுவனம் கூறியது.
பீர்களில் அதிகளவில் விற்பனையாகும் கிங்ஃபிஷர், கிங்ஃபிஷர் ஸ்ட்ராங், கிங்ஃபிஷர் அல்ட்ரா, கிங்ஃபிஷர் அல்ட்ராமேக்ஸ் முதலான பீர்களை தயாரிக்கும் யுனைடெட் ப்ரூவெரிஸ், பீர்களின் விலையை அதிகரிக்குமாறு தெலங்கானா அரசிடம் கோரியது.
இதையும் படிக்க:நிறுவனங்களைப் பழிவாங்கும் ஊழியர்கள்! ஏன்?
இருப்பினும், அந்நிறுவனத்தின் கோரிக்கையை தெலங்கானா அரசு கண்டுகொள்ளாததால், நிதி நெருக்கடி காரணமாக ஜனவரி 8 ஆம் தேதி முதல் பீர் விற்பனையை நிறுத்தியது.
இந்த நிலையில், மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதில் தடை ஏற்படாமலிருக்க, யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கைக்கு தெலங்கானா அரசு அனுமதியளித்ததுடன், பீர் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்றுமுதல் (பிப். 11) 15 சதவிகித விலையேற்றத்துடன் பீர்கள் விற்பனை செய்யப்படும் என்று யுனைடெட் ப்ரூவெரிஸ் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, பீர் தொழில்துறையில் நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்குமாறும் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் பீர் தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
அதிக அளவிலான தயாரிப்பாக பீர்கள் இருப்பதால், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் மாநிலத்தின் விநியோகச் சங்கிலி, வேலைவாய்ப்பு, துணைத் தொழில்கள், தளவாடங்கள் துறையில் குறிப்பிடத்தக்க பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.