கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது.
அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் லட்சக்கணக்கான பக்தர்களில் ஒருபகுதியினர் தங்கள் சொந்த வாகனங்களிலும் பிறர் பொது போக்குவரத்து சேவையையும் சார்ந்துள்ளனர்.
அப்படியிருக்கையில், பிரயாக்ராஜுக்கு போதிய எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படாததால் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் பலருக்கு ரயில்களில் இடம் கிடைக்காததால் அவர்கள் இன்ஜின் மீது ஏறிச் செல்ல முற்பட்டதையும் காண முடிந்தது. நல்வாய்ப்பாக விபத்துகளும் அசம்பவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பிகார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் நேற்று(பிப். 10) நின்று கொண்டிருந்த, ஜெயா நகரிலிருந்து பிரயாக்ராஜ் வழியாக புது தில்லிக்கு செல்லும் சுவதந்திரதா சேனானி எக்ஸ்பிரஸ்(12561) ரயிலில் இடம்பிடிக்க பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்தனர். இதன் காரணமாக நெரிசலும் தள்ளுமுள்ளும் உண்டானது.
ரயிலில் இடம் கிடைக்காத விரக்தியில் பயணிகள் சிலர், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இதனால் அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்ற பின்னரும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதை காண முடிந்தது.
எனினும், சம்பவ இடத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படை(ஆர்பிஎஃப்) காவலர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், ரயில் மீது கற்களை வீசி எறிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ரயில், உடைந்த ஜன்னல் கண்ணாடிகளுடனே இயக்கப்பட்டதால், சமஸ்திபூர் ரயில் நிலையத்தை ரயில் சென்றடைந்ததும் பயணிகள் சிலர் இந்த ஜன்னல்கள் வழியாக ஏசி வகுப்பு பெட்டிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.