வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை
பஞ்சாப் வெள்ளம் பேரிடராக அறிவிப்பு! 30 பேர் பலி!
பஞ்சாபை பேரிடர் பாதித்த மாநிலமாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இன்று வரை 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து 19,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கிய பயிர்கள் எல்லாம் அறுவடைக்கு தயாரான பயிர்கள் என்பதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2025-ன் கீழ் மாநில நிர்வாகக் குழுவின் தலைவரும் பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளருமான கே.ஏ.பி. சின்ஹா, மாநிலத்தின் 23 மாவட்டங்களை வெள்ளம் பாதித்தப் பகுதிகளாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சுறுத்தும் பேரிடர் சூழல் ஏற்பட்டால், சட்டப்பிரிவு 34-ன் கீழ் தேவையான அனைத்து உத்தரவுகளைப் பிறப்பிக்க மாவட்ட ஆணையாளர்களுக்கு அவர் அதிகாரம் அளித்துள்ளார். அவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்கவும் அவசர நிலைக்கு தயாராக இருக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கவும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவும் அனைத்து மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் செப். 7 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்-களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, பஞ்சாப் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளின் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!