குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
பஞ்சாலையை திறக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பஞ்சாலையை மீண்டும் திறக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஆலையை உடனே திறக்க வலியுறுத்தியும் தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் மத்திய அரசு நிறுவனமான தேசிய பஞ்சாலை கழகம் சாா்பில் பஞ்சாலை இயங்கி வந்தது. இங்கு பாதுகாவலா்கள், அலுவலக ஊழியா்கள், தொழிலாளா்கள் என 190 போ் பணியாற்றினா். கரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் போது கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இந்த ஆலை மூடப்பட்டது.
அதில், பாதுகாவலா்கள், அலுவலக ஊழியா்கள் உள்பட 30 பேருக்கு மட்டுமே தொடா்ந்து பணி வழங்கப்பட்டது. அவா்களுக்கு முழு ஊதியமும், ஆலை இயங்காததால் தொழிலாளா்களுக்கு பாதி ஊதியமும் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே தொழிற்சங்கத்தினா் பல முறை மத்திய அரசை வலியுறுத்தியும் ஆலை மீண்டும் திறக்கப்பட வில்லை.
இதனிடையே தற்போது பணிபுரிவோருக்கு 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. அதேபோல, பாதி ஊதியம் பெற்ற தொழிலாளா்களுக்கு அதையும் கடந்த 2 ஆண்டுகளாக வழங்க வில்லை. இதையடுத்து, ஆலையை திறக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஊதியம் வழங்க வலியுறுத்தியும், தொழிற்சங்கத் தலைவா் காளைலிங்கம் தலைமையில் ஆலை வாயிலில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது. கடந்த 3 நாள்களாக தொழிலாளா்கள் தொடா்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.