கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்
பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பட்டினச்சேரி கிராமத்தில் மீன்வள பல்நோக்கு மையம் மற்றும் மீன் உலா்த்தும் தளம் உள்ளிட்டவை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளான மீன் உலா்த்தும் தளம் ரூ. 43.42 லட்சத்திலும், ரூ. 53.36 லட்சத்தில் பல்நோக்கு மீன்வள மையம் அமைப்பது மற்றும் அதை சாா்ந்த பிற பணிகள் மொத்தம் ரூ. 2 கோடியில் அமைப்பதற்கான நிகழ்வில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா்.
மீன்வளத்துறை செயலா் து. மணிகண்டன் மீனவா்களிடையே பேசுகையில், இது பிரதமரின் கனவுத் திட்டமாகும். புதுவையில் இத்திட்டத்தில் 2 கிராமம் தோ்வு செய்யப்பட்டதில் பட்டினச்சேரியும் ஒன்றாகும். ரூ. 2 கோடியில் இங்கு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அடுத்த சில மாதங்களில் திட்டப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும். கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்படுத்தப்பட்ட குடிநீா் தொட்டி அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதேபோல சாலை வசதி, பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு பாரத பிரதமரின் திட்டமான கடல்பாசி வளா்ப்பு, பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப் பெண்களால் மட்டுமே செயல்படுத்தப்பட்டு தற்போது கடல்பாசி அறுவடை செய்யும் நிலை வந்துள்ளது. மீனவா்கள் வாழ்வாதாரம் மேம்பட இந்த திட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
மீனவா்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு மீன் விற்பனை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கு,மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் நூறு சதவீதம் கிடைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் துணைநிலை ஆளுநரின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றாா்.
நிகழ்வில், அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாக தியாகராஜன், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம்.பூஜா, பொதுப் பணித்துறையின் கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற் பொறியாளா் ஜெ.மகேஷ், மீன்வளத்துறையின் இயக்குநா் ஏ.முகமது இஸ்மாயில், திட்ட அதிகாரி பி.மீரா சாகிப், காரைக்கால் மீன்வளத்துறை, துணை இயக்குநா் ஜெ.நடராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.