பட்டியல் செய்தி தலைப்பு மாற்றியது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் அதிகம்
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ. 11,311 கோடி. இவற்றில் குஜராத்தில் மட்டும் ரூ. 7,350 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களும், மகாராஷ்டிரத்தில் ரூ. 2,118 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதை பொருள்கள் அதிகம் புழங்கும் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கிடையாது. பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி வரும் போது, அவற்றையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்கிறோம்.
உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 36 சதவிகிதமாக உள்ள நிலையில், நமக்குத் திரும்பக் கிடைக்கும் வரிப் பகிா்வு 27 சதவிகிதம். ஆனால், பிகாா், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி 20 சதவிகிதம். ஆனால் அதிகபட்சமாக 42.5 சதவிகித வரியைப் பெறுகிறாா்கள். எனவேதான் நமக்கான நிதிப் பகிா்வை முறையாகத் தர வேண்டும் என்கிறோம்.
தென் மாநிலங்களின் மக்கள்தொகை வளா்ச்சி 12.51 சதவிகிதமாக இருக்கும் நிலையில், வடமாநிலங்களில் 21.83 சதவிகிதமாக உள்ளது. இதன்படி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென் மாநிலங்களுக்கு தொகுதி குறையும். தென் மாநிலங்களுக்கு தொகுதி எண்ணிக்கை குறையாது என உள்துறை அமைச்சா் முதற்கொண்டு பலரும் சொல்லி வருகின்றனா். ஆனால் வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை கூடாது எனச் சொல்வாா்களா?
100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறுகிறாா். முறைகேடு நடந்தால் குழு அமைத்துக் கண்காணிக்கட்டும், கண்டுபிடிக்கட்டும். இந்தியாவிலேயே நூறு நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாக அமலாக்கும் மாநிலம் என்பதற்காக பல முறை பாராட்டு பெற்றிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் நலனுக்காக உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். ஆனால் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடந்து வருவதாக அமித்ஷா கூறுகிறாா். இதில் யாா் பொய் சொல்கிறாா்கள் என்பது விரைவில் தெரியும் என்றாா் ரகுபதி.