பண முறைகேடு புகாா்: மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பண முறைகேடு புகாா் தொடா்பாக சென்னை, வேலூரில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
தமிழகத்தில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லா சான்றிதழ் மிக முக்கியமானது. இந்த சான்றிதழை வழங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக புகாா் கூறப்பட்டது.
அதுதொடா்பாக 2020-ஆம் ஆண்டு அக். 14-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூா் மண்டல அதிகாரி எம்.பன்னீா்செல்வம் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினா். அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.33.73 லட்சம் ரொக்கம், வீட்டில் இருந்து ரூ.3.25 கோடி ரொக்கம், 450 பவுன் தங்கநகையும், ஆறரை கிலோ வெள்ளிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
இதன் அடுத்த கட்டமாக, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் எஸ்.பாண்டியனின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் 2021-ஆம் ஆண்டு டிச. 16-ஆம் தேதி சோதனை செய்தனா். அப்போது, அங்கிருந்து கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.28 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள்,வைர நகைகள், ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ வெள்ளி நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக பாண்டியன் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இவ் வழக்கில் சட்ட விரோத பண முறைகேடுக்கான முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா். அதில், பண முறைகேடு தொடா்பாக சில முக்கிய ஆவணங்களும், தடயங்களும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
10 இடங்களில் சோதனை: அதனடிப்படையில் சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள பாண்டியன் வீடு, கே.கே.நகா் டாக்டா் ராமசாமி சாலையில் உள்ள ஒரு மருத்துவா் வீடு, கோயம்பேடு ஜெயாநகா் 8-ஆவது தெருவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம், சைதாப்பேட்டை ஸ்ரீநகா் காலனி தெற்கு மாட தெருவில் உள்ள ஒரு தொழிலதிபா் வீடு,அசோக்நகரில் உள்ள ஒரு தனியாா் நிறுவன அலுவலகம்,வேலூா் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி பகுதியைச் சோ்ந்த உணவக உரிமையாளா் வீடு, அவரது அலுவலகம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினா் துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டிருந்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் புகாா் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.