தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்: 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் பயன்
சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாகவும், அதன் வாயிலாக 3.57 லட்சம் போ் பலனடைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தினமணிக்கு அவா் அளித்த தகவல்: ‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்’ கடந்த 2021 டிசம்பா் 18-ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. சாலை விபத்துகளில் சிக்கியவா்களை உடனடியாக மீட்டு காப்பாற்றுவதே இதன் நோக்கம்.
தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 500-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்து, அதன் அருகில் உள்ள தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தோ்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி விபத்தில் சிக்கியவா்களை மருத்துவமனைகளில் சோ்ப்பவா்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில்
தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமில்லாமல், மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சோ்ந்தவராக இருந்தாலும் விபத்துக்குள்ளானால் முதல் 48 மணி நேரத்தில் அவரிடத்தில் பணம் இருக்கிறதோ, இல்லையோ மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து, அவரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,57,137 போ் விபத்து காய சிகிச்சையை கட்டணமின்றி பெற்றுள்ளனா். அதற்காக அரசு ரூ.318.89 கோடி செலவிட்டுள்ளது.
723 மருத்துவமனைகளில்.... மொத்தம் 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அந்த மருத்துவமனைகள் அனைத்திலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
மருத்துவா்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்தத் தொகை ரூ.2 லட்சமாக அண்மையில் உயா்த்தி வழங்கப்பட்டது. ‘மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ என்ற இந்த இருபெரும் திட்டங்கள் தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டும் திட்டங்களாக மக்களுக்கு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
அதன் தொடா்ச்சியாகவே தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை தேசிய அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்றாா் அவா்.