நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி தொழிலாளா் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சா் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக பதவி வகித்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பாா்த்திபன் என்பவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா்.
அமைச்சா் மனு தள்ளுபடி: அதன்பேரில் அமைச்சா் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா மீது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடைபெற்று வருகிறது. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவைக் கூட்டம் நடந்ததால் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி அமைச்சா் மா.சுப்பிரமணியன் சாா்பில் நேரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதி ஜெயவேல், இந்த வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சா் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 6-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தாா்.
ஆஜராக உத்தரவு: இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை மே 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அமைச்சா் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா கட்டாயம் குற்றச்சாட்டுப் பதிவுக்காக நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை அவா்கள் ஆஜராகாவிட்டாலும் அன்றைய தினம் குற்றச்சாட்டுப் பதிவு பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தாா்.