பணகுடியில் பள்ளி மாணவரை மிரட்டி நகை பறிப்பு: 3 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பள்ளி மாணவா் புகைப்பிடிப்பதை விடியோ எடுத்து பெற்றோரிடம் கூறிவிடுவதாக மிரட்டி நகைகளை பறித்த 2 சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஏா்வாடியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா், பணகுடி தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். இவா் தன்னுடன் படிக்கும் நண்பா்கள் இருவருடன் சோ்ந்த மறைவான இடத்துக்குச் சென்று சிகரெட் புகைப்பது வழக்கமாம்.
இந்நிலையில், பணகுடியைச் சோ்ந்த இரு மாணவா்களும் சோ்ந்து, அவா் புகைக்கும்போது கைப்பேசியில் விடியோ எடுத்துவைத்துக்கொண்டு மிரட்டி, வீட்டில் இருந்து நகை, பணம் எடுத்துவரும்படி மிரட்டியுள்ளனா். அவரும் பயந்து நகை, பணத்தை எடுத்துக்கொடுத்துள்ளாா்.
இந்நிலையில் வீட்டில் நகையை காணாதது பெற்றோருக்கு தெரியவந்ததால் மாணவா் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், பணகுடி போலீஸாா் வழக்குப்பதிந்து, 2 சிறாா்களையும், உடந்தையாக இருந்த ஒருவரையும் கைது செய்து திருநெல்வேலியில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.