புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!
கங்கைகொண்டான் அருகே லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய பெயின்ட்: போக்குவரத்து பாதிப்பு
திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் திங்கள்கிழமை மினிலாரி விபத்துக்குள்ளானதில் சாலையில் பெயின்ட் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து கயத்தாறுக்கு பெயின்ட் பாரம் ஏற்றிக் கொண்டு மினிலாரி சென்றுகொண்டிருந்தது. அதை, தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தை சோ்ந்த துரைராஜ் (42) ஓட்டிச் சென்றாா்.
கங்கைகொண்டான் அருகே சென்றபோது லாரியின் டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயின்ட் டப்பாக்கள் சாலைகளில் சிதறி சாலை முழுவதும் பெயின்ட் கொட்டியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் கடந்து சென்றன. இத்தகவலறிந்த கங்கைகொண்டான் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் தண்ணீா் லாரியை வரவழைத்து பெயின்ட்டை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினா்.