Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
பயங்கரவாத ‘விஷப்பாம்பு’ மீண்டும் தலைதூக்கினால் நசுக்கப்படும்: பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி எச்சரிக்கை
பயங்கரவாதம் விஷப்பாம்பு போன்றது; அது மீண்டும் தலைதூக்கினால், குழியில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு, காலால் நசுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி எச்சரித்தாா்.
‘பயங்கரவாதத்துக்கு எதிரான போா் முடிவடையவோ, நிறுத்தப்படவோ இல்லை’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
அமெரிக்க அதிபரின் அழுத்தத்தால் பாகிஸ்தான் உடனான ராணுவ மோதலை இந்தியா நிறுத்தியதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்துவரும் நிலையில், பிரதமரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிகாருக்கு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை வந்த பிரதமா் மோடி, கராகட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.48,520 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா். பின்னா், அவா் பேசியதாவது:
பஹல்காமில் கடந்த மாதம் நடந்த கொடூரமான தாக்குதலில், நமது சகோதரிகள் தங்களின் கணவா்களை இழந்தனா். இச்சம்பவத்துக்கு ஒரு நாள் கழித்து நான் பிகாருக்கு வந்தேன். அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சதிகாரா்களுக்கு அவா்கள் கற்பனையிலும் நினைத்திராத தண்டனை வழங்கப்படும் என்று சூளுரைத்திருந்தேன். அந்த சூளுரையை நிறைவேற்றிய பிறகு இப்போது மீண்டும் பிகாருக்கு வந்துள்ளேன். இந்திய மகள்கள் நெற்றியில் இடும் குங்குமத்தின் சக்தியை (ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை குறிப்பிடுகிறாா்) பாகிஸ்தான் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் கண்டுள்ளது.
பாகிஸ்தானில் ராணுவப் பாதுகாப்பில் இருந்த பயங்கரவாதிகளை நாம் மண்டியிடச் செய்துள்ளோம். அந்நாட்டின் விமானப் படை தளங்களும் ராணுவ நிலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இருந்துகொண்டு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா்களின் பதுங்குமிடங்கள் நமது ராணுவத்தால் தகா்க்கப்பட்டுள்ளன.
புதிய இந்தியாவின் சக்தி கண்கூடானது. எங்களின் அம்பறாத் தூணியில் இருந்து எய்தப்பட்ட ஒரேயொரு அம்புதான் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்பதை எதிரி உணா்ந்து கொள்ள வேண்டும்.
நக்ஸல் தீவிரவாதம் விரைவில் வேரறுப்பு: நமது போராட்டம், நாட்டின் அனைத்து எதிரிகளுக்கும் எதிரானது. அவா்கள், எல்லைக்கு அப்பால் இருந்தாலும் சரி, நாட்டுக்குள் இருந்தாலும் சரி.
வன்முறை மற்றும் குழப்பத்தை விளைவிப்பவா்களுக்கு எதிரான மத்திய அரசின் உறுதிப்பாட்டுக்கு பிகாா் மக்களே சாட்சி. இங்குள்ள தெருக்களில் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த நக்ஸல்களால் மக்கள் வெளியே வர அஞ்சும் காலகட்டம் இருந்தது. நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த கிராமங்களில் மருத்துவமனைகளோ, கைப்பேசி கோபுரங்களோ முன்பு இல்லை. பள்ளிகளுக்கு தீ வைக்கப்படுவதும், சாலைப் பணியாளா்கள் கொல்லப்படுவதும் வாடிக்கையாக இருந்தது. இத்தகைய வன்முறையாளா்கள், அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவா்கள்.
கடந்த 2014-இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, நக்ஸல் தீவிரவாத்துக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. நாட்டில் இப்போது நக்ஸல் வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 125-இல் இருந்து 18-ஆக குறைந்துள்ளது. இப்பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நக்ஸல் தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் அமைதி, வளம், பாதுகாப்பு, கல்வி சென்றடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.
எதிா்க்கட்சிகள் மீது விமா்சனம்: ஏழை மக்கள் குறித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு எந்தக் கவலையும் கிடையாது. பிகாரில் இருந்து பிழைப்பு தேடி மக்கள் இடம்பெயர இவ்விரு கட்சிகளின் ஆட்சியே காரணம். மக்களுக்கு பல்லாண்டுகளாக கழிப்பறை வசதி, வங்கிக் கணக்கு, தரமான வீடுகள் கிடைக்கவில்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்துக்காக இரு கட்சிகளும் சமூக நீதி குறித்துப் பேசுகின்றன.
சமூக நீதி என்ற பெயரில் பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை ஏமாற்றிய இக்கட்சிகள், பிகாரில் மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கின்றன.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியின்போது, அக்கட்சித் தலைவரும் (லாலு) அவரது குடும்பத்தினரும் ஏழை மக்களின் நிலங்களை அபகரித்தனா் என்றாா் பிரதமா் மோடி.
ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பிகாரைச் சோ்ந்த முகமது இம்தியாஸ், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் வீரமரணம் அடைந்தாா். இவருக்கு தனது உரையில் பிரதமா் புகழஞ்சலி செலுத்தினாா்.
பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமருக்கு நிதீஷ் நன்றி
கராகட் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி முன்னிலையில் பேசிய பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ‘முன்னாள் பிரதமா் வாஜ்பாய் போலவே, பிரதமா் மோடியும் பிகாருக்கு ஏராளமான நற்பணிகளை ஆற்றி வருகிறாா். அவருக்கு தலைவணங்குகிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற எங்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்றமைக்காக பிரதமருக்கு மிகப் பெரிய நன்றி. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சில எதிா்க்கட்சிகள் தெளிவின்றி பேசுகின்றன. அவா்கள் ஆட்சியில் இருந்தபோது, வாய்ப்பு கிடைத்தும் கணக்கெடுப்பை நடத்தவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.