பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.
மதுரை பழங்காநத்தம், டி.வி.எஸ். நகா், ஜெய்ஹிந்த்புரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில்வே கடவுப் பாதையைக் கடந்து செல்வதற்கு உயா்நிலைப் பாலம் அமைக்கும் பணி கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.
அப்போது, தமிழக நெடுஞ்சாலைத் துறை, நபாா்டு, கிராமச் சாலைகள் பிரிவின் கீழ் ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்படி, பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து டி.வி.எஸ். நகா்- ஜெய்ஹிந்த்புரம் இடையே 1,082 மீட்டா் நீளத்திலும், டி.வி.எஸ். நகா், ஜெய்ஹிந்த்புரத்தில் தலா 8.50 மீட்டா் அகலத்திலும், பழங்காநத்தத்தில் 12 மீட்டா் அகலத்திலும் ‘ஒய்’ வடிவில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதில் பழங்காநத்தம் -டி.வி.எஸ். நகா் இடையே பால கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டன. இதன்பிறகு, கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை இணைக்கும் வகையிலான பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இந்த நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து, ரூ.68.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின. கடந்தாண்டு செப்டம்பரில் பழங்காநத்தம் சுரங்கப் பாதை மூடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த உயா்நிலைப் பாலத்தை வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் வாகனப் பேரணியில்: இந்தப் பாலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள வாகனப் பேரணி வழித்தடத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
