பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
பல்லடத்தில் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து சென்னையில் இருந்து கைப்பேசி மூலம் செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பல்லடம் நாளுக்குநாள் வளா்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்குள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பல்லடம் நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
இது குறித்து ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையாக பல்லடம் நகருக்கு புறவழிச்சாலை திட்டத்தை பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியில் தொடங்கி மாணிக்காபுரம், குங்குமம்பாளையம் வழியாக மாதப்பூா் முத்துகுமாரசாமி மலை அருகே சென்று இணையும் வகையில் வெளிவட்ட புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.
அந்தக் கோரிக்கையை ஏற்று காளிவேலம்பட்டி முதல் மாதப்பூா் வரை 13.8 கிலோ மீட்டா் தொலைவு வெளிவட்டச் சாலை அமைப்பதற்கு ரூ.195 கோடி மதிப்பில் 2024-2025-ஆம் ஆண்டு பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அந்தப் பணிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலை தீா்ப்பதற்காக உடனடியாக வெளிவட்டச் சாலை பணியை தொடங்க வேண்டும் என்று சட்டப் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தி பேசினேன். அதற்கு பதலளித்த அமைச்சா் எ.வ.வேலு இது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறினாா் என்றாா்.