பள்ளி சத்துணவில் புழு: மாணவா்கள் புகாா்
தியாகதுருகம் ஒன்றியம், பழைய உச்சிமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மதியம் மாணவா்களுக்கு வழங்கிய உணவில் புழு இருந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
உச்சிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். அவா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்ட மதிய உணவில் புழு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த மாணவ, மாணவிகள் உணவை சாப்பிடாமல் கீழே கொட்டினராம். மேலும், இதுபோல அடிக்கடி நிகழ்வதாக குற்றஞ்சாட்டினா். இதுகுறித்த விடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இதுகுறித்து அறிந்த தியாகதுருகம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) கோவிந்தசாமி பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். சமையலா் கற்பகத்திடம் தரமான உணவு வழங்கவும் அறிவுறுத்தினாா்.
புது உச்சிமேடு ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ், ஆசிரியா்கள் ராயப்பன், செந்தில், சத்துணவு பொறுப்பாளா் தேன்மொழி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.