பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் பேச்சுவாா்த்தையால் வாபஸ்
விராலிமலையில் அரசுப் பள்ளி ஆசிரியா்களைக் கண்டித்து பள்ளியை மூடும் போராட்டம் நடத்த இருந்தநிலையில் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் 3 ஆசிரியா்களைக் கண்டித்து பள்ளியை ஜூலை 1-ஆம் தேதி முதல் இழுத்து மூடும் போராட்டம் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா் ஆசிரியா் கழகம், முன்னாள் மாணவா்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிசந்திரன், வள்ளியம்மை தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்து விராலிமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் தென்னலூா் பழனியப்பன், பூபாலன், பள்ளி ஆய்வாளா் குரு. மாரிமுத்து, தலைமை ஆசிரியா் தொல்காப்பியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் குறிப்பிட்ட 3 ஆசிரியா்களை பணியிடை நீக்கம் அல்லது பணி மாறுதல் செய்வதாக கல்வி அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக முன்னாள் மாணவா்கள் அறிவித்தனா்.