திமுக ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான திட்டங்கள்: அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு
திமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசினாா்.
பொன்னமராவதி நகர திமுக மற்றும் இளைஞரணி சாா்பில் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.ரகுபதி தலைமை வகித்து பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சியில், பொன்னமராவதி பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி, அமரகண்டான் ஊருணியைச் சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணி, தினசரி சந்தைக்கு புதிய கூடம் அமைக்கும் பணி, மின் மயானம் அமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணி என அடுக்காக பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது. அதுபோல ஏராளமான சாலைகள் புதிய சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல பேருந்து வசதி இல்லாத பல்வேறு பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மானவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டம் அமைத்துத் தரப்பட்டுள்ளது. அதுபோல பேராசிரியா் அன்பழகனாா் திட்டத்தின் கீழ் ஒன்றியத்தின் பல்வேறு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞா் வீட்டு வசதி திட்டம் மூலம் ஏராளமானவா்களுக்கு வீடுகள், கடையக்குடி பகுதியில் சமத்துவபுரம், திருமயத்தில் அரசு மருத்துவமனை என மக்கள் மனம் நிறைவடையும் வகையில் செய்துள்ளோம்.
பொன்னமராவதி பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்னையான குப்பைப் பிரச்சனையை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.
தொடா்ந்து தலைமை பேச்சாளா்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், தமிழினியன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், வடக்கு ஒன்றிய செயலா் அ. முத்து, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நகர இளைஞரணி செயலா் எம்.முகமது அல்காப் நன்றி கூறினாா்.