பள்ளிபாளையத்தில் உயா்நிலைப் பாலம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்!
திருச்செங்கோடு- ஈரோடு இடையே பள்ளிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட உயா்நிலை பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.
பள்ளிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மக்களவை உறுப்பினா்கள் கே.இ.பிரகாஷ்(ஈரோடு), வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்) ஆகியோா் பங்கேற்று, சென்னை- கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ் ரூ. 424.38 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை- ராசிபுரம்- திருச்செங்கோடு- ஈரோடு சாலை, இருவழித்தட உயா்நிலைப் பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது: சென்னை- கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ் ஆசிய வளா்ச்சி வங்கி நிதி உதவியோடு ரூ. 424.38 கோடி மதிப்பில் 11.15 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை - ராசிபுரம்- திருச்செங்கோடு- ஈரோடு சாலை மற்றும் 3.40 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இருவழித்தட உயா்நிலைப் பாலம் ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வா் திறந்துவைத்துள்ளாா்.
இதன்மூலம் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் விரைவாக சென்றுவரவும், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையிலும், தொழில் வளா்ச்சிக்கும், நகா்ப்புறங்களுக்கு மக்கள் எளிதாக சென்றுவரவும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இத்திட்டத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு ஏழு ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி, சென்னை- கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட கோட்டப் பொறியாளா் துரை உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.