பள்ளியில் வைத்து பாலியல் வதைக்குள்ளான சிறுமி; சிக்கிய சிறுவர்கள்- விசாரணை வளையத்தில் திமுக நிர்வாகி!
சேலத்தில் 13 வயது சிறுமியைப் பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவர்களை போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட சிறுவர்களை தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் காப்பாற்றும் விதமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் கூறப்படுவது, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை உயரதிகாரிகள் சிலர், ``சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில் இயங்கி வருகிறது அரசினர் மேல்நிலைப்பள்ளி. இதில், சுமார் 750 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவியை, அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 22.01.2025 ஆம் தேதி பள்ளி முடித்து வீட்டிற்குச் செல்ல இருந்த மாணவியை, பள்ளியில் உள்ள பெண்கள் கழிப்பறை அருகே இருந்த புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார், அந்த மாணவன். இதனை மறுநாள் தனது நண்பர்களிடம் கூற, அவர்களும் இதற்கு ஆசைப்பட்டு தாங்களும் வருவதாகக் கூற... மறுநாளும் இதே போன்று மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே இருந்த காதலனின் நண்பர்களை பார்த்து கூச்சலிட்ட சிறுமியை, கன்னத்தில் அடித்ததுடன் கீழே தள்ளி சிறுமியிடம் காட்டுமிராண்டித்தனமாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் யாரிடமும் இதுபற்றி சொல்லக் கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளனர் அந்தச் சிறுவர்கள்.
இது குறித்து வீட்டில் யாரிடமும் தெரிவிக்காத சிறுமி, அதே வலியுடன் மறுநாள் பள்ளிக்கு வந்துள்ளார். இடைவேளை பொழுதில் சிறுநீர் கழிப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது சிறுமி சிறுநீர் கழிக்க வலியால் பெரும் அவதிப்பட்டு தனது நண்பர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனை சம்பந்தப்பட்ட சிறுமியின் நண்பர்கள் வகுப்பு ஆசிரியரிடம் கூற, அவரும் சம்பந்தப்பட்ட பதினோராம் வகுப்பு மாணவர்களின் ஆசிரியரிடம் தெரியப்படுத்தி, மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையினை 06.02.2025 ஆம் தேதியன்று அழைத்து சிறுமியை வேறு பள்ளிக்கு மாற்றிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர் ஆசிரியர்கள். இது குறித்த தகவல் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரியவர சிறுமியை அழைத்து விசாரித்து, சம்பந்தப்பட்ட மூன்று சிறுவர்கள் மீதும் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் மூலம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.

இது தொடர்பாக குழந்தை பாதுகாப்பு குழுவினரிடம் பேசியபோது, “சிறுமி பாதிப்படைந்ததாக தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன்படி சிறுமியையும், அவரது பெற்றோரையும் நேரில் சந்தித்துப் பேசினோம். சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று பின்னர் குழந்தைகள் நலக்குழு உதவியுடன் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தோம்” என்றனர்
மேலும் இது குறித்து விசாரித்து வந்த தனிப்பிரிவு போலீஸார் சிலரிடம் பேசியபோது, “தற்போது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 சிறுவர்களும் செல்போன் மூலமாக ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்துதான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இதன் உச்சகட்டம் வகுப்பறைக்குள்ளேயே செல்போனை எடுத்து வந்து ஆபாச படம் பார்த்து சிக்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் வெளியில் வந்தவுடன், பள்ளி நிர்வாகம் சிறுமிக்கு தந்தை மட்டும் இருப்பதால், அவரை அழைத்து சிறுமியை வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறும், அவரது நடவடிக்கை சரியில்லை என்றும் பழிசுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில்தான் மல்லியக்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழியின் கணவரும், பள்ளி மேலாண்மைக் குழு தலைவருமான ஜோதி என்பவர் தனது சமூகத்து மாணவன் பாதிப்படைந்திடக் கூடாது என்று சிறுமியின் பெற்றோரிடம், இது தொடர்பாக யாரிடமும் தெரியப்படுத்தக் கூடாது என்று கூறியதுடன், மேலும் குற்றம்சுமத்தப்பட்டவர்களிடமிருந்து பணம் பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து சம்பந்தப்பட்ட நபரைப் பிடிக்கச் செல்லும் போது, அவர் காவல் நிலையத்துக்கு வந்து கொண்டிருப்பதாகக் கூறிவிட்டு, தலைமறைவானார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க-வினர் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு நியாயம் கேட்டு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மீது நடவடிக்கை வேண்டும் என்று புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யிடம் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆத்தூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்கொடியிடம் பேசியபோது, ”பள்ளி மேலாண்மைக் குழு தலைவருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் அவரை அழைத்து வரச் சென்றபோது, அவரே தன்னுடைய வாகனத்தில் வருவதாகக் கூறிவிட்டு, வரவில்லை. பின்னர் மறுநாள் முறைப்படி சம்மன் அனுப்பி கூப்பிட்டபோதும், முறையான பதில் இல்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.
மேலும் இது குறித்து புகார் சுமத்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஜோதியிடம் பேசியபோது, “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது பொய்யான புகாரை தெரிவிக்கின்றனர். எனக்கு தகவல் கிடைக்க பெற்றதே 10.02.2025 ஆம் தேதி தான். அப்போதே மல்லியக்கரை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டி பள்ளி தலைமையாசிரியரிடம் கூறிவிட்டேன்” என்றார்.
இது குறித்து சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயலை தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. அவருக்கு வாய்ஸ் மெசேஜ் அளித்தும் பதில் இல்லை.
இது தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி உமாவிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட சிறுவர்களைக் கைதுசெய்துள்ளோம். மேலும், தகவல் ஏன் மறைக்கப்பட்டது என்பது குறித்து ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றார்.