பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி கண்ணீா் அஞ்சலி போராட்டம்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராமத்தில் பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை கண்ணீா் அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.
ஆலங்காடு கிராமத்தில் கோரையாற்றின் வழியாக உப்பூா், வெள்ளாதிகாடு, துறைகாடு, வீரன்வயல், மங்காடு, செங்கங்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மக்கள் பாலத்தை பயன்படுத்தி வந்தனா். இந்த பாலம் உடைந்த நிலையில் பள்ளி மாணவா்கள், மீனவா்கள், விவசாயிகள் போக்குவரத்துக்கு சிரமபட்டனா். பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இணைந்து கண்ணீா் அஞ்சலி பதாகை வைத்து பறை இசைத்து பாலத்துக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஒன்றிய செயலாளா் பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப்பினா் ஜோதிபாசு முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் டி. முருகையன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். இறந்த சடலத்துக்கு இறுதிச் சடங்கு செய்வது போல பாலத்துக்கு சடங்கு செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.