பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் குளிக்க அனுமதி தேவை! முதல்வருக்கு ஊராட்சித் தலைவா் மனு!
பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவா் தி.சுடலையாண்டி மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, சிற்றருவி ஆகியவை வனத்துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், சிற்றருவிக்கு மட்டும் சுற்றுலாப்பயணிகள் சென்றுவர முடியும்.
தற்போது, பேரருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவை குற்றாலம் பேரூராட்சி கட்டுப்பாட்டிலும், பழைய குற்றாலம் அருவி ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளன. இதில், பழைய குற்றாலம் அருவியிலும் பொதுமக்கள் குளிக்க விடாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினா் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனா்.
வாகன நுழைவு கட்டணம், சாலையோர குத்தகை உள்ளிட்ட வகைகளில் ரூ. 50 லட்சம் வரையில் ஆயிரப்பேரி ஊராட்சிக்கும், கடைகள், உடைமாற்றும் அறைகள், கட்டண கழிப்பறைகள் மூலமாக ரூ.10 லட்சம் வரையில் பொதுப்பணித் துறைக்கும் ஆண்டுதோறும் வருவாய் கிடைத்தது.
இந்நிலையில், பழைய குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை அரை கி.மீ. தொலைவுக்கு முன்பாகவே வனத்துறையினா் தடுத்து நிறுத்துவதால் அங்கிருந்து அருவிக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.
மேலும், காலை 6மணி முதல் மாலை 6மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கின்றனா். இதனால், இந்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினா் வசம் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி ஆயிரப்பேரி ஊராட்சி, பாட்டப்பத்து ஊராட்சி, தென்காசி ஊராட்சி ஒன்றியம், தென்காசி மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி,கடையநல்லூா் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசியுள்ளனா்.
நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், வனத்துறை அமைச்சா் பொன்முடி ஆகியோா் பழைய குற்றாலம் அருவி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனா்.
எனவே, பழையகுற்றாலம் அருவியை வழக்கம்போல் ஆயிரப்பேரி ஊராட்சியின் பராமரிப்பில் செயல்படவும், 24 மணிநேரம் அருவியில் குளிக்க அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.