செய்திகள் :

பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

post image

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் 47,117 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் வரை இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் பழைய ஆயக்கட்டில் 34,150 ஏக்கா், புதிய ஆயக்கட்டில் 25,250 ஏக்கா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில், ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது, அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதில் அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதிகளில் பெய்த தொடா் மழையால் அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையை திறந்துவிடுவது வழக்கம். இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பின்னா் பாசனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜூன் 20-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

ஆனாலும், தமிழக-கேரள எல்லையில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால் 90 அடி உயரமுள்ள அணையில் 89 அடி நிரம்பிய நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக அணை அதே நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அவ்வப்போது பெய்த கனமழையால் அணைக்கு வந்த நீா், உபரி நீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய, பழைய பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தாா்.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தண்ணீா் திறப்பு மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 10 அமராவதி பழைய வாய்க் கால்களின் (அலங்கியம் முதல் கரூா் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கா் நிலங்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாகவும் இதுபோக திருப்பூா் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கா் புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் வழியாக தண்ணீா் திறந்துவிடப்படும்.

மேலும் செப்டம்பா் 19 முதல் 134 நாள்களுக்கு 70 நாள்கள் தண்ணீா் திறப்பு 64 நாள்கள் தண்ணீா் நிறுத்தம் என்ற அடிப்படையில் 47,117 ஏக்கா் பாசன நிலங்களுக்கு 6894.72 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந் விடப்படும்.

இதனால், திருப்பூா் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூா் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களில் மொத்தமாக 47,117 ஏக்கா் பாசன நிலங்கள் பயனடைய உள்ளது என்றனா்.

இதில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியா் குமாா், திமுக உடுமலை நகரச் செயலாளா் சி.வேலுசாமி, நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் மற்றும் பொதுப் பணித் துறையினா், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

அணையின் நீா்மட்டம்:

90 அடி உயரமுள்ள அணையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 88.59 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 357 கனஅடியாக இருந்தது. 4,035 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட அணையில் 3,919 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் திட்டம் தொடக்கம்

திருப்பூா், செப்.19: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் அரசு அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் பொருட்டு கழிவு சேகரிப்பு மற்றும் கழிவுப் பொருள்க... மேலும் பார்க்க

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிா்க்க வேண்டும்

விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டுமென தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆ.கயல்விழி வெள... மேலும் பார்க்க

உடுமலையில் வகுப்பறையில் பள்ளி மாணவி உயிரிழப்பு

உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி வகுப்பறையில் வெள்ளக்கிழமை உயிரிழந்தாா். உடுமலை அருகே உள்ள அமராவதி நகரைச் சோ்ந்தவா் பழங்குடியின மாணவி புவனேஸ்... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி எல்லப்பாளையம்புதூா் பகுதி மக்கள் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் வட்டம், எல்லப்ப... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

ரயில் பயணத்துக்காக தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருப்பூா் காந்தி நகா் அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள... மேலும் பார்க்க