பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மனு
உற்பத்தி செலவுக்கேற்ப பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து தமிழக இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் எம்.தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 80 சதவீத்துக்கு மேல் விவசாயிகள் கால்நடை வளா்ப்பை நம்பியே உள்ளனா். ஒரு லிட்டா் பால் உற்பத்தி செய்வதற்கு ரூ. 60 க்கு மேல் செலவாகிறது என்பதால் கால்நடை மூலப்பொருளான பருத்திக்கொட்டை, பிண்ணாக்கு , தவிடு, கலப்பு தீவனம், வைக்கோல் போன்றவை விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது.
இதனால் கால்நடை வளா்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதன்காரணமாக 25 ஆண்டுகளாக உரிய பால் கொள்முதல் விலை கிடைக்காமல் போராடி கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பாலின் தரம் அறியும் எம்.ஆா்.எஃப் ஃபாா்முலாவை கைவிட்டுவிட்டு, இதர சத்துக்களை அறிவதற்கான ஐஎஸ் ஃபாா்முலாவை அமல்படுத்தினால், லிட்டருக்கு 56 காசு பால் உற்பத்தியாளருக்கு கூடுதலாக கிடைக்கும்.
எனவே, பாதிக்கப்பட்டுள்ள பால் உற்பத்தியாளா்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவே பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
இந்தப் பேட்டியின்போது, சேலம் மாவட்டத் தலைவா் செல்வராஜ், மாநகரத் தலைவா் யுவராஜ், செயலாளா் சுரேஷ், சங்க நிா்வாகிகள் கருணாகரன், தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.