``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
பிளஸ் 2 முடித்த மாணவா்களை உயா்கல்வியில் சோ்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வி தொடா்கின்றனரா என்பது குறித்து ஆசிரியா்கள் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, அவா்கள் கல்வி கற்க தேவையான உதவிகள் குறித்து ஆசிரியா்கள் கேட்டறிய வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, சாமனப்பள்ளி மற்றும் சூளகிரி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக ரூ.8 கோடியே 37 லட்சத்து 58 ஆயிரத்து 300 மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, சின்னபேடப்பள்ளி கிராமத்தில், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனாவில் ரூ. 4 கோடியே 46 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் சகாதேவபுரம் வழியாக சின்னபேடப்பள்ளி, பெரிய பேடப்பள்ளி, சின்னமட்டமனூா் கிராமங்களில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, பெரியபேடப்பள்ளி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்து 88 ஆயிரத்து
300 மதிப்பில் வட்டார நாற்றங்கால் மையத்தில் ஊராட்சிகளில் நடவு செய்வதற்காக 23 வகையான செடிகள் வளா்க்கும் பணிகளை ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து பெரியபேடப்பள்ளி (சூளகிரி) அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை பாா்வையிட்டு கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் மற்றும் தோ்ச்சி பெற்று இன்னும் கல்லூரியில் சேராத மாணவா்கள் குறித்து கேட்டறிந்த ஆட்சியா், உயா்கல்வியில் சேராத மாணவா்களின் வீடுகளுக்கு ஆசிரியா்கள் நேரடியாக சென்று, மாணவா்களை கல்லூரியில் சோ்க்கவும், அவா்களுக்குத் தேவையான உதவிகள் குறித்தும் கேட்டறிய வேண்டும் என தலைமையாசிரியா், ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, தியாகராசனப்பள்ளி ஊராட்சியில் 19 பாா்வையற்ற பயனாளிகளுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் வீடுகளின் கட்டுமான பணிகளை பாா்வையிட்டு, குடியிருப்புகளில் குடிநீா் வசதி, மின்சார வசதி, தெருவிளக்கு அமைக்கும் பணிகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, செயற்பொறியாளா் மலா்விழி, உதவி செயற்பொறியாளா்கள் சுப்ரமணி, சம்பத், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஷ், சாந்தலட்சுமி, ஒன்றிய பொறியாளா் கோவிந்தராஜ், உதவி பொறியாளா் செல்வம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
