புகையிலைப் பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ‘சீல்’
பள்ளிபாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்து அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரெங்கநாதன் மற்றும் குழுவினா் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து புதன்கிழமை முதல் இரு நாள்களாக மேற்கொண்ட சோதனையில் வெப்படை கீழ் காலனி உள்ளிட்ட பள்ளிபாளையம் பகுதிகளில் பெட்டிக் கடை, டீக்கடை, மளிகைக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் தங்க விக்னேஷ் உத்தரவின்பேரில் கடைகளில் பதுக்கிவைத்திருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன் 3 கடைகளுக்கும் சீல் வைத்தனா். மேலும், கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.