புதுகை காந்திப் பூங்காவை முறையாக பராமரிக்கக் கோரி உண்ணாவிரதம்!
புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்க வேண்டும், காந்திப் பூங்காவை மீண்டும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையினா் சனிக்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.
புதுக்கோட்டை காந்திப் பூங்காவில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காந்திப் பேரவையின் நிறுவனா் வைர.ந தினகரன் தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட்- லெனின்ஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் பொதுச் செயலா் க.சி. விடுதலைக்குமரன், காங்கிரஸ் கட்சியின் இப்ராஹிம் பாபு, ஜெ. ராஜா முகம்மது, ஊழல் தடுப்பு இயக்கத்தின் சையது இப்ராஹிம், மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சா. விஸ்வநாதன், பேரவையின் தலைமை நிலையச் செயலா் மோகனபிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும். பழைமையான காந்திப் பூங்காவை மீண்டும் சீரமைத்து முழுமையான மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ஆவுடையாா்கோவில் வட்டம் பேரானூா் கிராமம் மாரமங்கலம் ஏரி நுழைவுப் பகுதியில் பல்லுயிா்ப் பெருக்கம் கொண்ட காட்டில் தனியாா் சோலாா் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். புதுக்கோட்டை நகரிலுள்ள காந்திப் பேரவை அலுவலகத்தில் அண்மையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.