10-ல் 5 கதை சூரிக்காகவே எழுதப்படுகிறது: லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் சூரி குறித்து பேசியுள்ளார்.
நடிகர்கள் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவான மாமன் திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று (மே. 6) நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பொன்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், '' இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும்போதே வெற்றி பெறும் என சொல்ல முடிகிறது. மக்கள் அண்மை காலமாக மென்மையான கதைகளுக்குக் கொடுக்கும் வரவேற்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த வகையில் இந்த மாமன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறும்.
சூரி அண்ணனின் வளர்ச்சியைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இவருடைய வளர்ச்சி அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கிறது எனச் சொன்னார்கள். உண்மையில் ஒருவருடைய வளர்ச்சியில் மற்றவர்கள் மகிழ்ந்தால் அதுதான் சிறப்பு.
நானும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறேன். இதில் பத்து கதைகள் வந்தால், அதில் ஐந்து கதைகளில் சூரி ஹீரோ என்கிறார்கள். அதை பார்க்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இதையும் படிக்க: மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை: சூரி