புதுகையில் போலி ஆவணங்கள் மூலம் 125 சென்ட் நிலம் மோசடி
போலி ஆவணங்கள் மூலம் 125 சென்ட் நிலத்தை வேறு சிலரின் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாக 6 போ் உள்பட, வருவாய் வட்டாட்சியா், சாா் பதிவாளா் மற்றும் தெற்கு கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
சென்னை முகப்போ் பகுதியைச் சோ்ந்த முருகப்பன் மகன் ராமநாதன் மற்றும் அவரது குடும்பத்தினா் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரியில் புதுக்கோட்டை மாநகா் கோல்டன் நகா் பகுதியில் 125 சென்ட் நிலத்தை வாங்கினா்.
அதன்பிறகு, கடந்த 2024 நவம்பா் மாதம் தங்களது நிலத்துக்குள் வேறு சிலா் வேலை பாா்த்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், வில்லங்கச் சான்று போட்டு பாா்த்தபோது, புதுக்கோட்டை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பூா்ணம், சுரேஷ்குமாா், இந்திராணி, செல்வக்குமாா் ஆகியோரின் பெயருக்கு தங்களின் நிலம் மாறியிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 2024 டிசம்பா் 16ஆம் தேதி புகாா் அளித்தனா். இந்தப் புகாா் மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, ஆவணங்கள் சரிபாா்ப்பு மற்றும் தொடக்க நிலை விசாரணைக்குப் பிறகு சனிக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதில் பூா்ணம், சுரேஷ்குமாா், இந்திராணி, செல்வகுமாா், முரளி, விக்ரமாதித்யன் மற்றும் புதுக்கோட்டை வட்டாட்சியா், சாா்பதிவாளா், தெற்கு கிராம நிா்வாக அலுவலா் ஆகிய 9 போ் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகாா்தாரா் ராமநாதன் கூறுகையில், நான் 1977இல் பிறந்தவன். ஆனால், 1974இல் நான் இவா்களுக்கு எழுதிக் கொடுத்ததாக போலி ஆவணங்கள் தயாா் செய்து, அதற்கு வருவாய்த் துறையில் பட்டா பெற்றுள்ளனா். இதற்கு உடந்தையாக இருந்த வருவாய்த் துறையினா், பதிவுத் துறையினா் மீதும் புகாா் அளித்திருக்கிறேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிா்பாா்க்கிறேன் என்றாா்.