அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்புறமாக நியமிக்க ஜிப்மர் திட்டமிடுகிறது’ - எச்சரிக்கும் திமுக
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போதைய ஒன்றிய அரசின் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பின்பற்றி வருகிறது.
அதன் காரணமாக மருத்துவ சேவையில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டு சிகிச்சை பெறுவதில் தடைகள் ஏற்பட்டிருக்கின்றன. படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம், இலவசமாக வழங்கப்பட்டு வந்த மருத்துவ சேவை தற்போது கட்டணமாக மாற்றி ஏழை, எளிய, நடுத்தர மக்களை விழிபிதுங்கி நிற்க செய்துள்ளது.
‘சி’ பிரிவில் எடுக்க வேண்டிய பணியாட்களை ஒப்பந்த முறையில் கொடுத்து லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது புதுச்சேரி ஜிப்மரில் 446 இடங்கள், ஏனாம் ஜிப்மர் கிளையில் 8 இடங்கள் என 454 செவிலியர் பணியிடங்களுக்கு 22.07.2025 அன்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் குரூப் 'பி'&'சி' தேர்வுகளுக்கு புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் வகையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் Common Recruitment Examination (CRE) என்ற தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருக்கிறது ஜிப்மர். இதன் மூலம் புதுச்சேரி வேலை வாய்ப்புகள் கொல்லைப்புறமாக வெளிமாநிலத்தவர்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் 19 எய்ம்ஸ் மருத்துவமனை இருந்தும் இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தருகிறார்கள். ஒன்றிய அரசின் ஊழியர்களுக்கு சிறப்பு வயது தளர்வு, காலிப்பணியிடங்கள் மற்றும் பொதுத்தேர்வுகளில் (இருமொழி) ஆங்கிலம் மற்றும் இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.
இது தமிழ் மற்றும் ஆங்கிலம் பயின்ற புதுச்சேரி இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு தேர்வு எழுதி காத்திருப்போர் பட்டியலில் உள்ள செவிலியர்களுக்கு இந்த வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.
ஆனால் அதை செய்யாமல் ஜிப்மர் நிர்வாகம் விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். கடந்த ஆண்டு 169 `பி’ குரூப் பதவிகளுக்கும், 209 ‘சி’ குரூப் வேலைவாய்ப்புக்கான தேர்வை ஜிப்மர் புதுச்சேரியில் நடத்தியில், இந்த செவிலியர் பணிக்கான தேர்வை மட்டும் எய்ம்ஸ் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
வேலை வாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்களை ஒதுக்கிவிட்டு, வட மாநிலத்தவர்களை தேர்வு செய்யும் ஒன்றிய அரசின் கொள்கையை ஜிப்மர் செயல்படுத்த முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம்.

ஜிப்மர் மருத்துவமனைக்காக புதுச்சேரி மாநிலம் இடம், நீர், மின்சாரம் உள்ளிட்ட வளங்களை எல்லாம் வழங்கி தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது. தற்போது கூட சேதராப்பட்டு கரசூரில் தொழில் வளர்ச்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்து 150 ஏக்கர் ஜிப்மர் வளர்ச்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதனால் தற்போது அறிவித்துள்ள செவிலியர் மற்றும் குரூப் பி & சி பணியிடங்களில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் புதுச்சேரி மக்கள் துணையுடன் வரும் 8-ம் தேதி மாபெரும் போராட்டத்தை தி.மு.க முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்” என்றார்.