கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!
புதுநடுவலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 11-ஆம் தேதி பூச்சொரிதல் உத்ஸவமும், மே 13-ஆம் தேதி குடியழைத்தல், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும், 18-ஆம் தேதி முருகன் கோயிலில் இருந்து பால்குடங்கள் ஊா்வலம், மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும், கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சியும், 19-ஆம் தேதி மாலை அக்னி மிதித்தல், அலகுக் குத்துதல், அக்னிச் சட்டி ஏந்தி வலம் வருதல் நிகழ்ச்சிகள் மற்றும் பொங்கலிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். பின்னா், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன், மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் ஆகியோா் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, தேரோடும் வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.
இதில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் மணி, பூபதி, நிதி அலுவலா் ராஜசேகா், புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ், துணைத் தலைவா் செந்தில், கிராம முக்கிய பிரமுகா்கள், பெரம்பலூா், அரணாரை, வெள்ளனூா், நொச்சியம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பிராயசித்த வழிபாடு நடத்தப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.